Saturday, September 25, 2010

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...! வளர்ச்சி-03 23.09.2010



கோபுரப்பட்டியின் பரிதாப நிலையினைக் கண்டு பதறிய திரு.இராஜகோபலன் என்னும் நமது வலைத்தளத்தின் வாசகர் உடனடியாக இதுப்பற்றிய தகவல்களை அவரது நண்பரும், அந்த சமயத்தில் “சக்திவிகடன்“ என்ற விகடன் குழுமத்தினைச் சார்ந்த மாதமிருமுறை ஆன்மீக பத்திரிக்கையின் ஆசிரியருமான திரு.P.சுவாமிநாதனிடத்து இதுப்பற்றி எடுத்துக்கூறி, அவரை கோபுரப்பட்டியினை நேரில் கண்டு எழுதுமாறு வேண்டுகோள்

விடுத்தார்.



முதன்முறை திரு.சுவாமிநாதன் இதற்காக பிரத்யேகமாக வருகைப்புரிந்த போது ஸ்ரீரங்கம் உள்பட கடுமையான மழை. கோபுரப்பட்டி செல்லமுடியாத சூழ்நிலை. என் மனம் பதறியது. ஏதும் செய்யவியலாமல் சென்றுவிட்டார். அரங்கனை மனதார வேண்டினேன், “சீக்கிரமாக ஏதேனும் செய்..!“ என்று. அரங்கனும் செவிமடுத்தார். மூன்று மாதங்களுக்குப்பின் மீண்டும் திரு.சுவாமிநாதன் வருகைபுரிந்தார்.



சக்திவிகடனில் “ஆலயம் தேடுவோம்“ என்ற பகுதியினில் கோபுரப்பட்டியின் பரிதாப நிலை பிரசுரிக்கப்பட்டு, உலகெங்கும் உள்ள ஆன்மீகவாதிகளிடையே ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தியது.



சென்னையிலிருந்து ஒரு அம்மையார் மற்றும் அவருக்கு உதவியாக மற்றொரு அம்மையார், இந்த செய்தி வெளியான சில நாட்களில், அடியேனுடைய இல்லத்திற்கு வந்தனர். தாங்கள் பல கோவில்களை புதுப்பித்து சம்ப்ரோக்ஷணை செய்திருப்பதாகவும், ஏதும் கவலை வேண்டாம், திருப்பணிகளை மட்டும் சிரத்தையாக செய்தால் போதும், பணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தான் கவனித்துக்கொள்வதாகவும் சொன்னார்கள்.



உடனடியாக மறுநாள் கோபுரப்பட்டியில் ஊர்கூட்டம், ஊராட்சி மன்றத் தலைவர் திரு. அனந்தராமன் தலைமையில் கூட்டப்பட்டது. நானும் என்னுடைய நண்பரும், திருவரங்கம் கோவிலில் பல அற்புதமான கைங்கர்யங்களை செவ்வனே செய்து வரும், எந்தவிதமான கைம்மாறும் கருதாத, கோவை ஆடிட்டர் திரு. இராமச்சந்திரன் என்பவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டோம். என்னிடம் கூறப்பட்ட விஷயங்கள் அனைத்தும் கூட்டத்தில் மீண்டும் உறுதியளிக்கப்பட்டது.



அனைவரும் அடியேன் உள்பட ஆனந்த அதிர்ச்சியோடும், கோபுரப்பட்டிக்கு ஒரு விமோசனம் ஏற்படப் போகும் மகிழ்வோடும் கலைந்து சென்றோம்...!







....வளர்ச்சித் தொடரும்...!

No comments: